போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார்: கல்லூரி மாணவர் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும்


போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார்: கல்லூரி மாணவர் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 7 Dec 2021 8:20 PM GMT (Updated: 7 Dec 2021 8:20 PM GMT)

போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோழிஏந்தல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் (வயது 22) என்பவர் கடந்த 4-ந் தேதி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ரோந்து பணியில் இருந்த கீழத்தூவல் போலீசார் அவரை நிற்க சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அவர் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் விரட்டி சென்று அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது தாயை வரவழைத்து அவசர, அவசரமாக மணிகண்டனை வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய மணிகண்டன் நள்ளிரவில் திடீரென உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் மணிகண்டன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மணிகண்டனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி அவரது தாய் ராமலட்சுமி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் தனது மகன் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, “மனுதாரர் மகன் பிரேத பரிசோதனை அறிக்கை தயாராகி வருகிறது. அவரது உடலில் உள்ளேயும், வெளியிலும் எந்த காயமும் இல்லை என வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். மறுபிரேத பரிசோதனை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதன்பின் உடனடியாக மணிகண்டனின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது, என உத்தரவிட வேண்டும்” என்றார்.

விசாரணை முடிவில், “மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி வீடியோ பதிவு செய்வது, உறவினர் ஒருவரை உடன் இருக்கச்செய்வது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

மேலும் “மறுபிரேத பரிசோதனை முடிந்தபின், மனுதாரர் தரப்பினர் உடனடியாக உடலைப்பெற்று அடக்கம் செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வாய்ப்பளிக்கக்கூடாது” என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

Next Story