தமிழக அரசும், தனியார் கல்லூரியும் மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


தமிழக அரசும், தனியார் கல்லூரியும் மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 7 Dec 2021 9:14 PM GMT (Updated: 7 Dec 2021 9:14 PM GMT)

பல் மருத்துவ படிப்பில் சேர்க்க மறுத்ததால் மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், தனியார் கல்லூரிக்கும் சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் ஜெயரஞ்சனி என்ற மாணவி தாக்கல் செய்துள்ள மனுவில், நான் எஸ்.சி. பிரிவை சேர்ந்தவள். என் தந்தை 2011-ம் ஆண்டு இறந்து விட்டார். என் தாயார் குடும்பத்தை கவனித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு பிளஸ்-2 பொது தேர்வில் 1,063 மதிப்பெண் எடுத்தேன். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தேன். சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில் கலந்து கொண்டேன். எனக்கு திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.பல் மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒதுக்கீட்டு ஆணை 2014-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி மாலை 4 மணிக்கு தான் மருத்துவ தேர்வு கமிட்டி வழங்கியது.

மறுநாள் காலையில் நான் கல்லூரி சென்றபோது, செப்டம்பர் 30-ந்தேதி மாலையுடன் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என்று கூறி என்னை சேர்க்க கல்லூரி நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே, என்னை பல் மருத்துவ படிப்பில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனவேதனை

இந்த வழக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மருத்துவ மாணவர்கள் சேர்க்கை கடைசி நாள் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி ஆகும். ஆனால், கடைசி நாளான செப்டம்பர் 30-ந்தேதி மாலை 4 மணிக்குத்தான் மனுதாரருக்கு கல்லூரியை ஒதுக்கி தேர்வு கமிட்டி உத்தரவை வழங்கியுள்ளது. அதன்பின்னர் மனுதாரர் தன் தாத்தாவுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலையில் 9 மணிக்கு கல்லூரிக்கு சென்றும், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, தந்தையை இழந்துள்ள மனுதாரருக்கு மிகப்பெரிய மன வேதனையை அளித்துள்ளது.

அரசு மீது தவறு

இந்த விவகாரத்தில், மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ கல்விக்கான தேர்வு கமிட்டி, கல்லூரி நிர்வாகம் ஆகியோர் மீது தான் தவறு உள்ளது. தேர்வு கமிட்டி முன்கூட்டியே கவுன்சிலிங்கை நடத்தி இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கியதை தேர்வு கமிட்டி தன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை கல்லூரி நிர்வாகம் சரி பார்த்து இருக்க வேண்டும்.

ரூ.5 லட்சம்

அதுமட்டுமல்ல மனுதாரருக்கு இடம் வழங்கிய விவரத்தை தேர்வு கமிட்டி, கல்லூரி நிர்வாகத்துக்கு தகவலை அன்று மாலையே அனுப்பியும், கல்லூரி நிர்வாகம் வேண்டுமென்றே மனுதாரரை சேர்க்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இவ்வாறு தகவல் கிடைத்தும் மாணவிக்கு இடம் வழங்காத கல்லூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதையும் செய்யவில்லை.

எனவே, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ கல்விக்கான தேர்வு கமிட்டி ஆகியோர் ரூ.3 லட்சமும், கல்லூரி நிர்வாகம் ரூ.2 லட்சமும் என்று மொத்தம் ரூ.5 லட்சத்தை இழப்பீடாக மனுதாரருக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story