பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 Dec 2021 11:05 PM GMT (Updated: 7 Dec 2021 11:05 PM GMT)

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலக கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

பொதுமக்களின் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணப் பதிவுகள், வில்லங்கச் சான்று வழங்குதல், ஆவணத்தின் சான்றிட்ட நகல் வழங்குதல், பல்வேறு திருமணச் சட்டங்களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்தல் போன்ற முக்கிய பணிகளை ஆற்றிவரும் சார்-பதிவாளர் அலுவலங்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அளிக்கவும், பணியாளர்களின் பணியை எளிமைப்படுத்தும் வகையிலும், வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

11 சார்-பதிவாளர் அலுவலகம்

சென்னை பதிவு மண்டலத்தில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் சேலையூர் சார்-பதிவாளர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம்; ஆலந்தூர் சார்-பதிவாளர் அலுவலக கட்டிடம் மற்றும் சாலவாக்கம் சார்-பதிவாளர் அலுவலக கட்டிடம்;

நெல்லை பதிவு மண்டலம் விக்கிரமசிங்கபுரம், வேலூர் பதிவு மண்டலம் நெமிலி, தஞ்சாவூர் பதிவு மண்டலம் மதுக்கூர், திருச்சி பதிவு மண்டலம் இரும்புலிக்குறிச்சி, கடலூர் பதிவு மண்டலம் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்-பதிவாளர் அலுவலக கட்டிடங்கள்;

மதுரை பதிவு மண்டலத்தில் கட்டப்பட்டுள்ள கடமலைகுண்டு சார்-பதிவாளர் அலுவலக கட்டிடம்; நெல்லை பதிவு மண்டலத்தில் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலக கட்டிடம்; வேலூர் பதிவு மண்டலத்தில் கட்டப்பட்டுள்ள களம்பூர் சார்-பதிவாளர் அலுவலக கட்டிடம்; கடலூர் பதிவு மண்டலம் விருத்தாசலம் ஒருங்கிணைந்த வளாக கட்டிடத்தில் கட்டப்பட்டுள்ள விருத்தாசலம் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ.14.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் விருத்தாசலம் மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டிடம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

வரி மென்பொருள் இணைப்பு

மேலும், பதிவுத்துறையின் மென்பொருளோடு சென்னை மாநகராட்சியின் சொத்து வரி பெயர் விவரங்கள் அடங்கிய மென்பொருளும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் தண்ணீர் வரி மென்பொருளும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் கட்டணம் செலுத்துவோர் விவர மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளன.

சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பரிவர்த்தனை நடக்கும்போது, சென்னை மாநகராட்சிக்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் சொத்து வரி ரசீது, தண்ணீர் வரி ரசீது மற்றும் மின் கட்டண ரசீது தொடர்பான பெயர் மாற்ற விவரங்கள் தானாகவே இணைய வழியாக அனுப்ப ஏதுவாக அமைகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பதிவுத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்துபோன 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, அவர்களில் 5 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story