கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம்


கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம்
x
தினத்தந்தி 8 Dec 2021 9:47 PM GMT (Updated: 8 Dec 2021 9:47 PM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

மதுரையில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரியார் பஸ் நிலையம், பெரியார் பஸ் நிலையம் அருகே ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூல வீதியில் ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புராதான அங்காடிகள், திருச்சியில் ரூ.18 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட உய்யகொண்டான் ஆற்றின் முகப்பு, தஞ்சாவூரில் ரூ.15 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ் நிலையத்தில் ரூ.14 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம்,

திருநெல்வேலியில் ரூ.13 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், வேலூரில் ரூ.13 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2.40 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம், தென்பெண்ணை ஆற்றினை நீராதாரமாக கொண்டு ரூ.8.10 கோடி மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்தை சேர்ந்த நாகொண்டபள்ளி மற்றும் 27 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.533 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 44 முடிவுற்ற திட்டங்களை தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

நிவாரண உதவித்தொகை

கொரோனா தடுப்பு பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முன்கள பணியாளர்களான களப்பணியாளர் ஜி.கணேசன் மற்றும் மின்னியலாளர் எம்.பாலாஜி ஆகியோரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா நிவாரண உதவித்தொகையாக தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பணி நியமன ஆணை

பேரூராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 37 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த ஆயிரம் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கும் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஒட்டுமொத்தமாக 1,037 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிக்கு கட்டணமில்லாமல் திருமணம்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மணமக்களின் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும், கோவிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக, சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி திருமணத்திற்கு மணமகன் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் மணமகள் எஸ். மோனிஷா ஆகியோருக்கு கோவிலில் திருமணம் செய்திட கட்டணம் இல்லை என்ற உத்தரவினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களுடன் பரிசு பொருட்களையும் வழங்கி, வாழ்த்தினார்.

இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம், இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்கள் மற்றும் திருக்கோவிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story