தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்: காஞ்சீபுரம் உள்பட 15 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்


தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்: காஞ்சீபுரம் உள்பட 15 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்
x
தினத்தந்தி 10 Dec 2021 11:08 PM GMT (Updated: 10 Dec 2021 11:08 PM GMT)

காஞ்சீபுரம் உள்பட 15 மாவட்டங்களில் முதல்கட்ட அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் வருகிற 13, 14-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையாளர்களை நியமித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அ.தி.மு.க. அமைப்புரீதியாக செயல்பட்டுவரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், தென்காசி வடக்கு மாவட்டம், தென்காசி தெற்கு மாவட்டம், விருதுநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம், சேலம் புறநகர் மாவட்டம், சேலம் மாநகர் மாவட்டம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட வட்டக்கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை), 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்தப்படுகிறது.

இதற்காக மட்டும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், கட்சியின் அமைப்பு தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் (கட்சியின் உறுப்பினர்கள்), மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றி படிவம் முதலானவற்றை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து பெற்று, அவற்றை ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்களிடம் வழங்கவேண்டும். கட்சியின் சட்டத்திட்ட விதிமுறைகளின்படி, கட்சியின் அமைப்பு தேர்தல்களை முறையாக நடத்தவேண்டும்.

கட்சியின் அமைப்பு தேர்தல் சுமுகமாக நடைபெறும் வகையில், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story