சென்னையில், நம்ம ஊரு திருவிழா ஜனவரி 14-ந் தேதி தொடங்குகிறது


சென்னையில், நம்ம ஊரு திருவிழா ஜனவரி 14-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 27 Dec 2021 7:02 PM GMT (Updated: 27 Dec 2021 7:02 PM GMT)

சென்னையி 500-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் நம்ம ஊரு திருவிழா ஜனவரி 14, 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஜூலை 1-ந் தேதியன்று நடத்தப்பட்ட கலை பண்பாட்டுத்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கிராமிய கலைஞர்களை கொண்டு சென்னையில் பிரமாண்டமான கலைவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, சட்டசபையில் கடந்த செப்டம்பர் 4-ந் தேதியன்று மானிய கோரிக்கை நடந்தபோது தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தை சேர்ந்த பாரம்பரிய கலைகளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்கு பெறும் பிரமாண்ட கலைவிழா, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் 3 நாட்கள் நடத்தப்படும். இதற்கென தொடரும் செலவினமாக கலை பண்பாட்டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

சென்னையில் 7 இடங்களில்....

இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தை சார்ந்த பாரம்பரிய கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழா, ஆண்டு தோறும் சென்னையில் 6 இடங்களில் (இணைய வழி மூலமாகவும்) 3 நாட்கள் நடத்துவதற்கு ரூ.91 லட்சத்தை தொடரும் செலவினமாக அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டுள்ளது.

அதை செயல்படுத்தும் வகையில் “நம்ம ஊரு திருவிழா” எனும் தலைப்பில் தமிழகத்தின் பாரம்பரியமான கிராமிய கலைகளை வெளிப்படுத்தும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களை கொண்டு, சென்னையில் 7 இடங்களில் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் கலை விழா நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வெளிமாநில கிராமிய கலைக் குழுவினர் இவ்விழாவில் பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சி, கோவை

“நம்ம ஊரு திருவிழா”வை, சீரும், சிறப்புமாக நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தலைமையில் 27-ந் தேதி (நேற்று) முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், கலை பண்பாட்டுத்துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சந்தீப் நந்தூரி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடத்தப்படுவதைப் போன்றே இவ்விழாவை மதுரை, திருச்சி மற்றும் கோவையிலும் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்கள், இந்த கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும், அரசு உயர் அலுவலர்களாலும், கலைஞர்களாலும் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை விரைந்து எடுக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story