அரக்கோணம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்த சம்பவம்: 6 பேரிடம் விசாரணை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Dec 2021 2:29 AM GMT (Updated: 28 Dec 2021 2:29 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அரக்கோணம்,

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன். சம்பவம் நடந்த இரவில் புஷ்கரனின் வீட்டுக் கதவை வேகமாக மர்ம நபர்கள் தட்டியிருக்கிறார்கள். பின்னர் புஷ்கரன் வீட்டுக்கதவை திறந்ததும், பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வெளியே நின்றுள்ளனர். 

இதனால், அதிர்ச்சி அடைந்த புஷ்கரன் உடனே வீட்டின் கதவை மூடியுள்ளார். எனினும்,  வெளியிலிருந்த கும்பல் வீச்சரிவாளால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.  புஷ்கரன் உள்பட வீட்டில் இருந்த  நான்கு பேரையும் வீச்சரிவாளால் வெட்டியதுடன் நாட்டுத் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். இதில் நால்வரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, பெண்கள் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 25 பவுன் நகைகளையும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். 

படுகாயமடைந்தவர்கள்  அரக்கோணம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்ட போலீசார்,  கொள்ளையர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருந்தனர். தீரன் பட பாணியில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  

இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 15ஆம் தேதி ஒய்வு பெற்ற அதிகாரிவீட்டில் இருந்த துப்பாக்கி கொள்ளை அடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், திருவள்ளூர் மாவட்டம் வியாசபுரத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் உட்பட 6 பேரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story