அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி டாக்டர் ராமதாஸ் பேச்சு


அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 29 Dec 2021 10:44 PM GMT (Updated: 29 Dec 2021 10:44 PM GMT)

2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சென்னை,

பா.ம.க. சார்பில், ‘2021-க்கு விடை கொடுப்போம். 2022-ஐ வரவேற்போம்' என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி

சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் முன்னேற்றம் என்பது தான் நமது லட்சியம். அந்த லட்சியத்தை வென்றெடுத்து வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல பா.ம.க. தலைமையில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசை அமைக்க வேண்டும். அதற்காக 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் தனி அணி அமைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் கூட்டணி அமைப்பது என்றால், நம்முடைய (பா.ம.க.) தலைமையில் தான் கூட்டணி. இனி பா.ம.க.வை ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரட்டும். ஆனால், தலைமை தாங்குவது பா.ம.க. தான்.

அனைத்து இடங்களிலும் போட்டி

2026-ல் தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும் என்ற உந்துததல், முனைப்பு, வேகம், விறுவிறுப்பு, சுறுசுறுப்பு உங்களுக்கு வேண்டும். வருகிற மாநகராட்சி, பேரூராட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் நாம் போட்டியிட வேண்டும். அதில் யாருக்காவது விட்டுக்கொடுத்துவிடுவோம் என்று யாராவது நினைத்தால், அவர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும்.

7 கடலையும் அடக்கும் ஆற்றல்

இதுவரையிலான தவறுகளை மன்னித்தோம். இனி தவறுகள் நடந்தால் மன்னிக்கமாட்டோம். உங்கள் பதவி பறிபோகும். இன்று நம்மிடம் இருப்பது இளைஞர் சக்தி. 7 கடலையும் கைக்குள் அடக்கும் ஆற்றல் மிக்க சக்தி. இது போதும். இந்த சக்தி பல்கி பெருகி லட்சக்கணக்கான வாக்குகளை பெற்று குறைந்தது 60, 70 இடங்களை பெறுவதற்கான சக்தியை உண்டாக்குவதற்கான வழிமுறைகளை உங்களுக்கு சொல்லி இருக்கிறோம். அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

சமூக ஊடகங்கள், திண்ணை பிரசாரம்

பா.ம.க.வில் பதவியில் இருப்பவர்களை உளவுத்துறை கண்காணிக்கும், அவர்கள் உரிய பணிகளை செய்யாமல் வீட்டில் தூங்கினால், அவர்கள் தூங்கி விழிக்கும் முன் அவர்களது பதவி பறிக்கப்படும். உள்ளாட்சி மாநகராட்சி தேர்தலில் கூட்டணி என்று விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இனி யாருக்கும் வரவேண்டாம். அப்படிப்பட்ட மானம் கெட்டவர்கள் இனி நம் கட்சியில் இருக்கக்கூடாது. பா.ம.க. என்றால் விலைபோகாதவர்கள் என்ற எண்ணம் வர வேண்டும்.

சமூக ஊடகங்கள், திண்ணை பிரசாரம் இரண்டையும் வைத்துக்கொண்டு பா.ம.க. தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது என்று இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் பேச வேண்டும். நம்மை முன்மாதிரியாக இந்தியாவில் உள்ள கட்சிகள் பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி, வக்கீல் பாலு, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், அருள், சதாசிவம், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசியல் தீர்மானம்

கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை டாக்டர் ராமதாஸ் வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுதல், மாநில வளர்ச்சிக்காக புதிய யோசனைகளை வழங்குதல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுதல் ஆகியவற்றை கடைபிடித்து பா.ம.க. செயல்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ம.க. திகழ்கிறது. ஜனநாயகத்திலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அதன் இலக்கு ஆட்சியைப் பிடிப்பதாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும். மக்களின் நலனுக்கான திட்டங்களை ஆட்சியாளர்களுக்கு யோசனையாக முன்வைத்து செயல்படுத்துவதை விட, அவற்றை நேரடியாகவே செயல்படுத்தும் இடத்தில் இருப்பதும், ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியாக இருப்பதை விட, தவறுகளே செய்யாத சிறந்த ஆட்சியை வழங்கும் இடத்தில் இருப்பதும் தான் ஓர் அரசியல் கட்சியின் உன்னத நோக்கமாக இருக்கும். பா.ம.க.வின் நோக்கமும் அது தான்; அதைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆட்சியை பிடிக்கும் இலக்கு

2021 தேர்தல் நிறைவடைந்து விட்ட சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலில் நமது நோக்கத்தை வென்றெடுப்பதற்கான அரசியல் பயணத்தை நாம் தொடங்கியாக வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது சற்று கடினமான இலக்குதான். ஆனால் சாத்தியமாகாத இலக்கு அல்ல. அனைத்து பாட்டாளிகளும் கடுமையாக உழைத்தால் அந்த இலக்கை நம்மால் நிச்சயமாக எட்ட முடியும். மக்களை மீண்டும், மீண்டும் சந்தித்து அவர்களின் ஆதரவை வென்றெடுப்பது; பா.ம.க.வை அனைத்து கிராமங்களிலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பா.ம.க. பொதுக்குழு உறுதியேற்றுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டப்போராட்டம்

இது தவிர, நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஒப்புதல் பெற்று 2022-23ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க பா.ம.க. உறுதியேற்கிறது.

* தமிழ்நாடு அரசு பணிகளில் 100 சதவீதமும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதமும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

* மழைவெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய ரூ.4 ஆயிரத்து 626 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story