ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை


ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2021 10:46 PM GMT (Updated: 29 Dec 2021 10:46 PM GMT)

முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் அவசியம் என்றும், ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மூன்றில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய இரண்டும் கடைபிடிக்கப்படுவதாக தெரியவில்லை.

2 நாட்களுக்கு முன்பு பெசன்ட் நகர் கடற்கரையிலும், தியாகராயநகர் ரங்கநாதன் தெருவிலும், காசிமேட்டிலும் குவிந்துள்ள கூட்டத்தின் புகைப்படங்களை பார்க்கும்போது பெரும்பாலானோர் முககவசம் அணியாமல் இருப்பது கண்கூடாக தெரிகிறது. முககவசம் அணிந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அரைகுறையாக அணிந்திருந்தனர். சமூக இடைவெளி என்பது முற்றிலுமாக காற்றில் பறக்கவிடப்பட்டு இருக்கிறது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஒமைக்ரானை வீழ்த்த...

இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 6-வது இடத்துக்கு வந்துவிட்டது. வந்தபின் காப்பதற்கு பதிலாக, வருமுன் காக்கும் வகையில் முககவசம் அணிவதை நூறு விழுக்காடு கண்டிப்புடன் அமல்படுத்துவதிலும், சமூக இடைவெளி கடைபிடித்தலை கடுமையாக செயல்படுத்துவதிலும் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

ஒமைக்ரானை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி நாம் அனைவரும் மிகுந்த கட்டுப்பாடுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இதை உலக சுகாதாரஅமைப்பின் அறிவியல் அதிகாரி வலியுறுத்தியதோடு, ஒமைக்ரான் தொற்று பரவும் ஆபத்தான இடங்களைக் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடவடிக்கை வேண்டும்

ஒமைக்ரான் தொற்று மக்கள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் வேகமாக பரவுவதால், ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை அரசு மக்களிடம் எடுத்துச்சென்று, தடுப்பூசி செலுத்தி கொண்டோர், செலுத்தாதோர் என அனைவரும் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் 100 சதவீதம் முககவசம் அணிதலையும், சமூக இடைவெளி கடைபிடித்தலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும், புத்தாண்டை முன்னிட்டு ஆங்காங்கே மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் டாக்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, ஒமைக்ரான் தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் முககவசம் அணிதலையும், சமூக இடைவெளியை கடைபிடித்தலையும், ஆங்காங்கே மக்கள் கூடுவதை தடுக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story