சென்னை விமான நிலையத்தில் போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்
x

அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கூரியல் பார்சல்களில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள சரக்கக பிரிவுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த கூரியர் பாா்சல்களில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின் பேரில், அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அங்குள்ள பார்சல்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 3 பார்சல்களில் வாழ்த்து அட்டைகள் என எழுதப்பட்டு இருந்தது. இந்த பார்சலின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அதை முழுவதுமாக பிரித்து பார்த்தனர். அப்போது நெதர்லாந்தில் இருந்து சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் 21 கிராம் எடைக் கொண்ட 53 நீல நிற போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போதை மாத்திரைகள், கஞ்சா

மேலும் அமெரிக்காவில் இருந்து சென்னை மற்றும் விஜயவாடாவில் உள்ள முகவரிக்கு வந்த 2 பார்சல்களில் 815 கிராம் எடைக் கொண்ட உயர்ரக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து 3 பார்சல்களில் இருந்து வந்த ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சென்னை, விஜயவாடாவில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்த போது, அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை யாருக்காக கடத்தப்பட்டது? இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story