சென்னை சைதாப்பேட்டையில் அரசு பள்ளி விடுதியில் 34 மாணவர்களுக்கு கொரோனா


சென்னை சைதாப்பேட்டையில் அரசு பள்ளி விடுதியில் 34 மாணவர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 Dec 2021 11:40 PM GMT (Updated: 31 Dec 2021 11:40 PM GMT)

சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் விடுதியில் தங்கிருந்த 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை தனிமைப்படுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் அரசு மாதிரி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நீட் உள்ளிட்ட சிறப்பு படிப்புகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். அந்தவகையில் சிறப்பு பயிற்சி வகுப்பில் படித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு, பின்னர், மீண்டும் பயிற்சி மையத்துக்கு வந்து விடுதியில் தங்கி படித்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 28-ந் தேதி அந்த மாணவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோத னையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாதிரி பள்ளியில் உள்ள பயிற்சி மைய விடுதியில் தங்கி படிக்கும் 71 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

34 மாணவர்களுக்கு கொரோனா

இவர்களின் பரிசோதனை முடிவு நேற்று வந்தது. பரிசோதனை முடிவில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 23 மாணவர்களும், 10 மாணவிகளும் அடங்குவர். இதையடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்ட 34 பேரையும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த பள்ளியில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் மரமணு மாற்றம் கண்டறியும் பரிசோதனையும் நடந்து வருகிறது. தற்போது அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்,’ என்றனர்.

Next Story