மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.86 அடியாக குறைவு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.86 அடியாக குறைவு
x
தினத்தந்தி 1 Jan 2022 4:05 AM GMT (Updated: 1 Jan 2022 4:05 AM GMT)

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.86 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் 13-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அதனை தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

நேற்றைய நிலவரப்படி காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 15,600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் நீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தினமும் குறைந்து கொண்டே வருகிறது. 

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.86 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 87.02 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,843 கன அடியில் இருந்து 4,012 கன அடியாக உயர்ந்துள்ளது. 

Next Story