கோவை: டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உள்பட 2 பேர் பலி


கோவை: டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Jan 2022 2:39 PM GMT (Updated: 2 Jan 2022 2:39 PM GMT)

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.

கோவை,

தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் டெங்கு காய்ச்சலும் சற்று தலை தூக்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. டெங்கு காய்ச்சலின் பாதிப்புக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

திருப்பூர் மாவட்டம் வளையன்காடு பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகள் கனிஷ்கா (வயது 6). இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது.

இதற்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அந்த சிறுமி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டெங்கு சிறப்பு வார்டில் அனுமதித்து சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் இருந்தபோதிலும் சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இதேபோல் கோவை மாவட்டம் அன்னூர் அருகே எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (38). இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story