ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Jan 2022 8:17 PM GMT (Updated: 2 Jan 2022 8:17 PM GMT)

மதுரையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் அருகிலேயே வங்கியும் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 2.40 மணியளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்மநபர் அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த அபாய மணி ஒலித்தது. இதனைத்தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதற்கிடையே, மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கும் சங்கேத அழைப்பு சென்றுள்ளது. அவர்கள் உடனடியாக மதுரை மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா

இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, அதிகாலை 4.15 மணியளவில் கீழ சந்தைப்பேட்டை பள்ளிவாசல் தெருவில் நின்றுகொண்டிருந்த சையது யாசின் அலி (வயது 25) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

வாலிபர் கைது

அதே சமயத்தில், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, யாசின் அலிதான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார் என்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட முயன்ற வாலிபரை, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து 1½ மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Next Story