மெகா முகாம்; தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 15.16 லட்சம்
தமிழகம் முழுவதும் நடைபெற்ற 17வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 15.16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
சென்னை,
தமிழகம் முழுவதும் 17வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்ட அறிக்கையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன.
இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது.
இதுவரை நடைபெற்ற 16 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 3 கோடி பேர் பயனடைந்துள்ளார்கள். அந்த வகையில் நேற்று நடைபெற்ற 17வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15,16,804 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணையாக 4,20,098 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 10,96,706 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 86.95% முதல் தவணையாகவும் 60.71% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story