புதுக்கோட்டையில் தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!


புதுக்கோட்டையில் தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!
x
தினத்தந்தி 3 Jan 2022 1:35 PM GMT (Updated: 3 Jan 2022 1:58 PM GMT)

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் இன்று திடீரென உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்,

புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த டிசம்பர் 30ந்தேதி அன்று திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்து வெளியேறிய ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் குடிசை வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுவன் புகழேந்தி (வயது11) தலையில் பாய்ந்தது. 

இதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் இன்று திடீரென உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறுவனின் உறவினர்கள் பலர் திரண்டுள்ளனர். மேலும், முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி அவர்கள்  திருச்சி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சிறுவனின் மூளையிலிருந்து இதயத்துக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டதால், சிறுவன் கோமா நிலையில், 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story