‘டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது’ செந்தில்பாலாஜி விளக்கம்


‘டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது’ செந்தில்பாலாஜி விளக்கம்
x
தினத்தந்தி 3 Jan 2022 10:25 PM GMT (Updated: 3 Jan 2022 10:25 PM GMT)

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்ததாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பார் டெண்டர் விடுக்கப்பட்டது. இதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து பார் உரிமையாளர்கள் சங்கத்தினர், இந்த டெண்டர்களை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை நேற்று பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி, முற்றுகை போராட்டதில் ஈடுபட்டவர்களில் 5 பேரை அழைத்து பேசினார். அப்போது, ‘டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படைத்தன்மையுடன்தான் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் எந்த பகுதியிலாவது முறைகேடு நடந்திருந்தால் எழுத்துப்பூர்வமாக புகார் தாருங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் கூறினார்.

வெளிப்படைத்தன்மையுடன் ஒப்பந்தப்புள்ளி

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-

டாஸ்மாக் பார்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு முறையாக வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது. ஆனால் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பார்களை டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி எனது வீட்டு முன்பு இன்று (நேற்று) திரண்டனர். அவர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை அவர்கள் தெரிவித்தனர். அதற்கு நான் விளக்கம் அளித்தேன். டாஸ்மாக் பார் ஒப்பந்தப்புள்ளிகள் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றுள்ளன.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஏற்கனவே உள்ள 66 விதிகளுடன் கூடுதலாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பார்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்ற 2 கூடுதல் விதிகளுடன் சேர்த்து 68 விதிகளுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இருந்தது. தமிழகத்தில் 5 ஆயிரத்து 387 டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரத்து 168 கடைகளில் மட்டும் பார் செயல்பட்டு வந்தது. 1,551 கடைகளில் பார் நடத்த வசதி இருந்தும் செயல்படவில்லை. அவற்றை எல்லாம் சேர்த்து தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு 5 ஆயிரத்து 387 கடைகளுக்கும் சேர்த்து 6 ஆயிரத்து 482 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. ஆனால் நடப்பு ஆண்டு 11 ஆயிரத்து 715 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இடையில் விடுமுறை நாட்கள் வந்ததால் டெண்டர்களை பிரித்து பார்க்க முடியவில்லை. தற்போது, அந்த பணிகள் நடந்து வருகிறது. எந்த முறைகேடும் இன்றி பார்கள் ஏலம் விடப்படும். அரசியல் உள்நோக்கத்துடன் வந்தவர்களுக்கு தெளிவான விளக்கத்தை அளித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 150 பேரை போலீசார் கைது செய்து மெரினா பகுதியில் உள்ள அம்பேத்கர் சமுதாய நல கூடத்தில் அடைத்து வைத்தனர்.

அவர்களில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்புகரசன் உள்பட 47 பேர் மீது பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story