ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பிளஸ்-2 மாணவி பரிதாப சாவு


ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பிளஸ்-2 மாணவி பரிதாப சாவு
x
தினத்தந்தி 4 Jan 2022 8:55 PM GMT (Updated: 4 Jan 2022 8:55 PM GMT)

ஓடும் பஸ்சில் இருந்து குதித்தபோது சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சினிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மனைவி ஆஷா. இந்த தம்பதிக்கு நவ்யா ஸ்ரீ (வயது 17) உள்பட 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். நவ்யா ஸ்ரீ கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தினமும் அரசு பஸ்சில் அவர் பள்ளிக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் மாணவி நவ்யா ஸ்ரீ நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். மாலை பள்ளி முடிந்து அரசு பஸ்சில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பஸ்சை ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த வெங்கடேசன் (58) ஓட்டினார். பஞ்சப்பள்ளியை சேர்ந்த குமார் (46) கண்டக்டராக இருந்தார்.

சக்கரத்தில் சிக்கி பலி

அரசு பஸ் மாணவியின் ஊரான சினிகிரிப்பள்ளியில் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது மாணவி நவ்யா ஸ்ரீ பஸ்சின் நடுப்பகுதியில் இருந்ததால் அவர் இறங்க தாமதம் ஏற்பட்டது. இதனை அறியாத டிரைவர் வெங்கடேசன் பஸ்சை இயக்கினார். இதனால் பதறிய மாணவி திடீரென பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே குதித்தார்.

அவர் எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கினார். இதில் அவருக்கு கை, கால் நசுங்கியது. படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நவ்யா ஸ்ரீ அங்கு இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக டிரைவர், கண்டக்டரை கைது செய்தனர். பின்னர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Next Story