குடுகுடுப்பைக்காரரின் வாக்கு பலித்துவிடுமோ என அச்சம்: மகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை


குடுகுடுப்பைக்காரரின் வாக்கு பலித்துவிடுமோ என அச்சம்: மகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2022 8:13 PM GMT (Updated: 6 Jan 2022 8:13 PM GMT)

குடுகுடுப்பைக்காரரின் வாக்கு பலித்துவிடுமோ என்ற அச்சத்தில் மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை,

கோவையை அடுத்த துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பார்க் சிட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது53). இவருடைய கணவர் திருமூர்த்தி. இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன் சசிக்குமார் (34). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர் சரவணம்பட்டியில் குடியிருந்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக சசிக்குமாரின் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

குடுகுடுப்பைக்காரரின் வாக்கு

இந்த நிலையில், தனலட்சுமி, மனநிலை சரி இல்லாத தனது மகள் சுகன்யாவுடன் (31) வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு தனலட்சுமியின் வீட்டுக்கு குடுகுடுப்பைக்காரர் வந்துள்ளார். அவர், வீட்டில் தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். இல்லை என்றால் கை, கால் செயல்படாமல் போய்விடும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை ஏற்படும் என்று வாக்கு சொன்னதாக தெரிகிறது.

மகளை கொன்று தற்கொலை

ஏற்கனவே தனது மகனுக்கு மருமகள் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது தனலட்சுமிக்கு மனக்கவலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் தனக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்றும், மகன் மற்றும் மகளை நினைத்தும் மிகவும் கவலைப்பட்ட தனலட்சுமி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இதையடுத்து அவர், மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து நேற்று இரவு தனது மகள் சுகன்யாவுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுகன்யா பரிதாபமாக இறந்தார். அதை உறுதி செய்து கொண்ட பிறகு தனலட்சுமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Next Story