போலீஸ் நிலையம் எதிரே பயங்கரம்: வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை - காய்கறி கடைக்காரரும் வெட்டிக்கொலை


போலீஸ் நிலையம் எதிரே பயங்கரம்: வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை - காய்கறி கடைக்காரரும் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 7 Jan 2022 12:14 AM GMT (Updated: 7 Jan 2022 12:14 AM GMT)

செங்கல்பட்டு போலீஸ்நிலையம் எதிரே வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். காய்கறி கடைக்காரரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (வயது 30). நேற்று மாலை செங்கல்பட்டு டவுன் போலீஸ்நிலையம் எதிரே கார்த்திக் டீ குடிக்க வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு வெடிகுண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

உருதெரியாமல் தலையை சிதைத்துவிட்டு அங்கிருந்து மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பகுதி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், காய்கறி சந்தை என பரபரப்பாக உள்ள பகுதி ஆகும்.

மற்றொருவரும் கொலை

செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மகேஷ் (22). காய்கறி வியாபாரி. இவரது வீடு செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மகேஷ் தனது வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது அதே கும்பல் வீட்டுக்குள் புகுந்து மகேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

அடுத்தடுத்து இரட்டை கொலை சம்பவம் குறித்து அறிந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இரட்டை கொலை சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.




Next Story