மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைப்பு..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Jan 2022 1:42 AM GMT (Updated: 7 Jan 2022 1:42 AM GMT)

கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக, மதுரையில் 12-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் 12-ந்தேதி நடைபெற இருந்த பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு குளறுபடியை கண்டித்தும், அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்தும் மதுரையில் நேற்று பா.ஜ.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடந்தது.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சி நிர்வாகிகள் இந்த ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் இருந்து தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை வரை சென்றது. முன்னதாக அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக வருகிற 12-ந்தேதி தமிழகம் வருவதாக மாநில அரசு அறிவித்திருந்தது. அதே சமயத்தில் பா.ஜ.க. சார்பில் மதுரையில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்திருந்தோம்.

கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகமாவதால், பிரதமர் கலந்து கொள்ளவதாக இருந்த 'நம்ம ஊர் பொங்கல்' நிகழ்ச்சி மாநில அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, மதுரையில் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுகிறது. இது தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பேசி எடுத்து கொண்ட முடிவு. பிரதமரை அழைத்து வரும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவு. மதுரை நகரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் வகையில் மற்றுமொரு நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும்.

விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சி மாநில அரசின் நிகழ்ச்சி. அதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அந்த நிகழ்ச்சி குறித்து மாநில அரசு முடிவு செய்யும். நாங்கள் நடத்துவதாக இருந்த கட்சி நிகழ்ச்சி மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். அவர் செல்ல இருந்த சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டார். 80 கிலோ மீட்டர் தூரம் சென்ற பின்னர் அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்த இடம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம். பிரதமரின் பாதுகாப்பை அந்த மாநில அரசு கேள்விகுறியாக்கி இருக்கிறது.

இதனை கண்டித்து பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு பல்வேறு போராட்டங்களை பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. மனித சங்கிலி, பேரணி, ஊர்வலம், மெழுகுவர்த்தி ஏந்தி அறபோராட்டம் நடக்கிறது. மாநில அரசு தனது கடமையை செய்யாமல் பிரதமரின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியது தொடர்பாக கவர்னரையும் சந்திக்க இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

Next Story