நீட் தேர்வு: அனைத்துக்கட்சி கூட்டம் பா.ஜ.க. வெளிநடப்பு ; எள் முனையளவு கூட பாதிப்பில்லை - வானதி சீனிவாசன்


நீட் தேர்வு: அனைத்துக்கட்சி கூட்டம் பா.ஜ.க. வெளிநடப்பு ; எள் முனையளவு கூட பாதிப்பில்லை - வானதி சீனிவாசன்
x
தினத்தந்தி 8 Jan 2022 6:27 AM GMT (Updated: 8 Jan 2022 6:48 AM GMT)

நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.எள் முனையளவு கூட பாதிப்பில்லை என வானதிசீனிவாசன் கூறினார்.

சென்னை:

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, 19.9.2021 அன்று சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தின் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கிடையே நீட் தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் 8-ந்தேதி  நடைபெறும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து  நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது;-

தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை  ஜனாதிபதிக்கு அனுப்புமாறு வலியுறுத்தினோம். ஆனால் ஜனாதிபதியின்  ஒப்புதலுக்கு அனுப்பாமல் கவர்னர் வைத்துள்ளார் என கூறினார்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறும் போது 

நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும். நீட் விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும்  என கூறினார்.

நீட் விலக்கு குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். நீட்விலக்கு தொடர்பான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானத்தில் பா.ஜ.க.வுக்கு உடன்பாடு இல்லை .ஒன்றிய அரசு, மாநிலங்கள் மீது நீட் தேர்வை திணித்திருப்பதாக தீர்மானத்தில் உள்ளது.ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள்; அப்போதே எங்கள் கருத்துகளை முழுமையாக பேச முடியாததால் வெளிநடப்பு செய்தோம்.

நீட் தேர்வால் இடஒதுக்கீட்டை விட அதிகமாக இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்; ஆரம்ப கட்டத்தில் நீட் தேர்வினால் சில பிரச்னைகள் இருந்ததை மறுக்கவில்லை; மாணவர்கள் கஷ்டப்படுவதாக அவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது.  நீட் தேர்வால் எள் முனையளவுக்கு கூட பாதிப்பில்லை. நீட்தேர்வு 10 மொழிகளில் நடைபெறுவதால் பலமாநில மாணவர்கள் பலனடைந்து உள்ளனர் என கூறினார்.

Next Story