தமிழகத்தில் முழு ஊரடங்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு- சாலைகள் வெறிச்சோடின


தமிழகத்தில் முழு ஊரடங்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு- சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 9 Jan 2022 4:52 AM GMT (Updated: 9 Jan 2022 5:46 AM GMT)

அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. ‘ஒமைக்ரான்’ வைரசும் அச்சுறுத்துகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுனர்களும் அறிவுறுத்தினர். 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சாலைகள் வெறிச்சோடின

இதன்படி இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கு காரணமாக இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.‘டாஸ்மாக்’ மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இயங்காது. ஆனால் மின்சார ரெயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயங்குகின்றன ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படுகின்றன. 

ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  மேம்பாலங்கள் அடைக்கப்பட்டு, சிக்னல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.  ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து கணிசமாக குறைந்து விட்டது. சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பிரதான சாலைகளும் ஆரவாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. 

 அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story