கோவை வந்த ரெயிலில் ரூ.30 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Jan 2022 8:53 AM GMT (Updated: 10 Jan 2022 8:53 AM GMT)

கோவை வந்த ரெயிலில் ரூ.30 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை,

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று இரவு திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ரூ.30 லட்சம் பணம் இருந்தது. அதற்குரிய ஆவணங்கள் அந்த வாலிபரிடம் இல்லை. 

தொடர்ந்து அந்த வாலிபரை அதே ரெயிலில் ஆர்.பி.எப். போலீசார் கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.30 லட்சத்தை பறிமுதல் செய்ததுடன், அவரை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லால் சிங் ராவ் (வயது 19)என்பதும், சென்னையில் இருந்து ரெயிலில் ஏறியதும் தெரியவந்தது. 

மேலும் அவர் தங்க நகை வாங்குவதற்காக கோவைக்கு வந்ததும் தெரியவந்தது. பின்னர் ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story