தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு?


தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு?
x
தினத்தந்தி 10 Jan 2022 12:58 PM GMT (Updated: 10 Jan 2022 12:58 PM GMT)

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்துக்கான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இன்று (திங்கட்கிழமை) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா பரவலும் உயர்ந்து வந்ததால், கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு முழுவதுமாக அனுமதி ரத்து செய்யப்படலாம் எனத் தெரிகிறது. 

அதேபோல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்துக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதல் அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Next Story