மனைவியை கொடூரமாக கொன்ற வங்கி ஊழியர் நடத்தையில் சந்தேகத்தால் வெறிச்செயல்


மனைவியை கொடூரமாக கொன்ற வங்கி ஊழியர் நடத்தையில் சந்தேகத்தால் வெறிச்செயல்
x
தினத்தந்தி 10 Jan 2022 8:15 PM GMT (Updated: 10 Jan 2022 8:15 PM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு மகன் கண்முன்னே மனைவியை வங்கி ஊழியர் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றார்.

விருதுநகர்,

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இவருடைய மனைவி கற்பகம் (30). இவர் கண்ணனின் சொந்த அத்தை மகள் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது. நிகர்ஜித் (10), ஹரிஷ் கண்ணா (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

சந்தேகம்

சமீப காலமாக கண்ணன், மனைவி கற்பகத்தின் நடத்தை மீது சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கற்பகம் தனது 2 மகன்களுடன், சிவகாசி மணிநகரில் உள்ள தனது சகோதரர் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கத்திக்குத்து

இந்தநிலையில் கண்ணன் ஜெயக்குமார் வீட்டிற்கு வந்து, நான் இனிமேல் பிரச்சினை செய்ய மாட்டேன் என்று கற்பகத்தின் காலிலும், ஜெயக்குமாரின் காலிலும் விழுந்து கெஞ்சியுள்ளார். இதையடுத்து கற்பகத்தின் சகோதரர் ஜெயக்குமார் சமரசம் செய்து, கற்பகத்தையும் குழந்தைகளையும் கண்ணனுடன் விருதுநகருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தநிலையில், நேற்று காலை 6.45 மணியளவில் கண்ணன் தனது இரண்டு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது, சமையல் அறையில் வைத்து கற்பகத்துடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது மூத்த மகன் நிகர்ஜித், தாயார் கற்பகத்தின் அலறல் சத்தத்தை கேட்டு பதறி எழுந்து சமையல் அறைக்கு சென்றபோது கண்ணன், கற்பகத்தின் மேல் அமர்ந்து கற்பகத்தை கத்தியால் குத்தியதை கண்டு அலறினான்.

கைது

அதனைக் கண்ட கண்ணன், நிகர்ஜித்தை வெளியே தள்ளி கதவைப்பூட்டி விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து சிறுவன் நிகர்ஜித் உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம், செல்போனை வாங்கி தனது மாமா ஜெயக்குமாருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து கதறி அழுதுள்ளான்.

உடனே ஜெயக்குமார் தனது உறவினருடன் வந்து பார்த்தபோது, கற்பகம் கொலையுண்டு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

நெல்லையில்...

இதேபோல நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த சுடலையாண்டி (வயது40) என்பவர் நடத்தையில் சந்தேகம் காரணமாக நேற்று தனது மனைவி ஜென்சியை (37) அரிவாள்மனையால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

Next Story