10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்: உருது மொழி பாடத்தை சேர்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்: உருது மொழி பாடத்தை சேர்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 11 Jan 2022 8:45 PM GMT (Updated: 11 Jan 2022 8:45 PM GMT)

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்: உருது மொழி பாடத்தை சேர்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மொழித்தேர்வில் தமிழ் மட்டுமல்லாது, மொழிச்சிறுபான்மை மாணவர்கள், தங்களது தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து தமிழக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.

எனவே, மொழிப்பாடத்தில் சிறுபான்மையினர் மொழியான உருது பாடத்தையும் கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இல்லை என்றால், சிறுபான்மையினரின் மொழி கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். அப்போது, “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை மொழி பாடத்தில் தேர்வு எழுத (2022-ம் ஆண்டு) வருகிற மார்ச் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “கடந்த 2017-ம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், அதுதொடர்பாக கோர்ட்டு அவமதிப்பு வழக்குத்தான் தொடர வேண்டும். அதையே காரணமாகக்கூறி அடுத்தடுத்து வழக்குகள் தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

Next Story