தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை தி.மு.க. கொண்டு வந்ததாக ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயற்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை தி.மு.க. கொண்டு வந்ததாக ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயற்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jan 2022 8:46 PM GMT (Updated: 11 Jan 2022 8:46 PM GMT)

தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை தி.மு.க. கொண்டுவந்ததாக “ஸ்டிக்கர்” ஒட்ட முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் சிரிக்கிறார்கள்

தென்றலும், வாடைக் காற்றும் வீசும்போது, இடை இடையே தோன்றும் அனல் காற்றுபோல, அவ்வப்போது சந்தர்ப்பவசத்தால் அமைந்த தி.மு.க. அரசு, பொய், பித்தலாட்டங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

அடுத்தவர் பெற்றெடுத்த குழந்தைகளை தங்களுடையது என்று, எங்கும் எதிலும் விளம்பரம் செய்வதையே தொழிலாகக் கொண்ட இப்போதுள்ள தி.மு.க. அரசை கண்டு மக்கள் விலா நோக சிரிக்கிறார்கள்.

11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

உதாரணமாக, ஓ.பி.சி.க்கு மருத்துவ மேற்படிப்பில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு. முதன் முதலில் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.தான் வழக்கு தொடுத்தது. இந்த இடஒதுக்கீடு விஷயத்தில், தாங்கள் மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிடுவோமோ என்ற எண்ணத்தில் தி.மு.க.வும், பா.ம.க.வும் பின் யோசனையுடன் தங்களை இணைத்துக் கொண்டன. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

அ.தி.மு.க. அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று கட்டிடம் கட்டுவதற்கான நிதியினையும் ஒதுக்கியது. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களுக்கு நானும், மத்திய சுகாதாரத் துறை மந்திரி சில மாவட்டங்களுக்கும், மற்றும் அமைச்சர்களும் நேரடியாக சென்று மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டோம்.

பிரதமருக்கு நன்றி

புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம் 1,450 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஏற்கனவே அரசு பள்ளி மாணாக்கர்களுக்காக, அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக, ஆண்டுதோறும் சுமார் 109 ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற உள்ளது.

12-1-2022 அன்று (இன்று), பிரதமர் நரேந்திரமோடி மேற்குறிப்பிட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் காணொளி மூலம் திறந்துவைக்க உள்ளார் என்ற செய்தி அறிந்து உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அ.தி.மு.க. அரசு கோரிக்கை வைத்தவுடன், தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு அனுமதியும், மத்திய அரசின் பங்கையும் வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயற்சி

இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை தி.மு.க. அரசு, தான் கொண்டு வந்ததாக “ஸ்டிக்கர்” ஒட்ட முயற்சிக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதை அ.தி.மு.க. சார்பாக கடுமையாக கண்டிக்கிறேன்.

இனியாவது தி.மு.க. அரசு “அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல்”, எதையும் தாங்கள் தான் செய்தோம் என்று விளம்பரப்படுத்தும் மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு தனது சொந்த செயல் திட்டங்களை வகுத்து, அவற்றினை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story