அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை


அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2022 10:12 PM GMT (Updated: 11 Jan 2022 10:12 PM GMT)

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 5-வது மாடியில் இருந்து குதித்து கப்பல் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க.நகர்,

சென்னை அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 57). கடல்சார் துறையில் பட்டப்படிப்பில் என்ஜினீயரிங் முடித்த இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த வெங்கடேசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5-வது தளத்தில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வெங்கடேசனுக்கு சுனிதா (54) என்ற மனைவியும், சித்தார்த் (16) என்ற மகனும். வர்ஷா (15) என்ற மகளும் உள்ளனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல் புளியந்தோப்பு, திரு.வி.க. நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பரத் (36). இவர் வீட்டின் சுவர்களுக்கு அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த 3 மாதமாக வேலை இல்லாத விரக்தியில் பரத் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story