தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மீது அ.தி.மு.க.தான் ஸ்டிக்கர் ஒட்டியது எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மீது அ.தி.மு.க.தான் ஸ்டிக்கர் ஒட்டியது எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
x
தினத்தந்தி 12 Jan 2022 7:07 PM GMT (Updated: 12 Jan 2022 7:07 PM GMT)

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மீது அ.தி.மு.க.தான் ஸ்டிக்கர் ஒட்டியது’ என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

சென்னை,

இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி வருமாறு:-

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு, தி.மு.க. அரசு தன்னுடைய ஸ்டிக்கர்களை ஒட்டுகிறது என்று ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஸ்டிக்கரை ஒட்டும் கலாசாரத்தை தமிழகத்தில் தொடங்கி வைத்தது யார் ஆட்சி?. ஸ்டிக்கர் ஆட்சி என்று மக்களாலே சொல்லப்பட்ட ஆட்சி எது? என்பதை எடப்பாடி பழனிசாமி வசதியாக மறந்து விட்டாரா?.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கினார்கள். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டியது, திருவள்ளுவர் படத்தையே ஸ்டிக்கர் போட்டு மறைத்ததுதான் அ.தி.மு.க. ஆட்சி.

தனியாரிடம் ஒட்டிய ஸ்டிக்கர்

கஜா புயல், சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல இடங்களில் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கியபோது, அவர்களின் நிவாரணப் பொருட்களில் அ.தி.மு.க.வினர் தங்களின் பெயரையும், ஸ்டிக்கரையும் ஒட்டிக்கொண்டனர். பொங்கலுக்காக கொடுக்கப்பட்ட கரும்புக்கணுக்களில்கூட ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரப்படுத்தி கொண்டனர்.

தற்போது பொங்கல் பையாக இருந்தாலும், பரிசாக இருந்தாலும், அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய ஒரு படம்கூட இல்லை. அவர்களைப் போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் எல்லாம், அவர்கள் எந்த அளவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள்.

ஸ்டிக்கர் ஒட்டிய அரசு திட்டங்கள்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், 2008-ம் ஆண்டு கருணாநிதி கொண்டு வந்த மிகப்பெரிய மகத்தான திட்டம். அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய முதல்-அமைச்சர், ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனத்துடன் தொடர்ந்து பேசி, ஜப்பானுக்கு சென்று சீரிய முயற்சிகளை மேற்கொண்டு, நிதியைப் பெற்று, அந்த திட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் நிறைவேற்றி, 95 சதவீத பணிகளை நிறைவேற்றிய நிலையில் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகினோம்.

அதன் பிறகு 2013-ம் ஆண்டில், 5 சதவீத பணியை மட்டும் அவர்கள் பார்த்து, குழாயில் தண்ணீரை திறந்துவைத்து விட்டு, ஏதோ அ.தி.மு.க. செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.

கருணாநிதியால் சீரும், சிறப்புமாக உருவாக்கப்பட்ட கோயம்பேடு பஸ் நிலையத்தை, அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் திறந்து வைத்து, தங்கள் பெயரை ஸ்டிக்கரில் போட்டுவிட்டு, கருணாநிதியின் கல்வெட்டை எடுத்தனர். கருணாநிதியால் உருவாக்கப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில், ஓமந்தூரார் ஆஸ்பத்திரி என்று போட்டு அவர்கள் உருவாக்கியதைப்போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டனர்.

விருதுநகர் மருத்துவ கல்லூரியும் 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிதான். நீங்கள் பெற்ற பிள்ளைகளை நீங்கள் பேணி பாதுகாத்திருக்க வேண்டும். நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தீர்களேயொழிய, சோறு வைத்தீர்களா? என்பது கேள்வி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story