சிப்காட் தொழிற்பேட்டைக்காக விளைநிலத்ைத கையகப்படுத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சிப்காட் தொழிற்பேட்டைக்காக விளைநிலத்ைத கையகப்படுத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2022 9:04 PM GMT (Updated: 12 Jan 2022 9:04 PM GMT)

சிப்காட் தொழிற்பேட்டைக்காக விளைநிலத்ைத கையகப்படுத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராடி வரும் மக்களை அழைத்து பேச்சு நடத்துவதற்கு பதிலாக, அவர்களை அச்சுறுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பாலியப்பட்டு பகுதியில் உள்ள விளைநிலங்களில் நிலக்கடலை, காய்கறிகள் தொடர்ச்சியாக சாகுபடி செய்யப்படுகின்றன. மலர் வகைகளும் மிக அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதனால் அப்பகுதி மக்கள் வறுமையின்றியும், வாழ்வாதார சிக்கல் இன்றியும் வாழ்ந்து வருகின்றனர்.

சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடும். கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஈடாக தமிழக அரசு எதை வழங்கினாலும் அது நிலங்களின் மூலம் கிடைக்கும் வாழ்வாதாரத்தை தொடர்ந்து வழங்காது.

எனவே, சிப்காட் வளாகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் இனி அமைக்கப்படும் சிப்காட் தொழிற்பேட்டைகள் தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், ஏற்கனவே தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள நில வங்கிக்கு சொந்தமான இடங்களில்தான் அமைக்கப்படும் என்பதை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story