எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவ கல்வி இடங்களை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப அனுமதிக்க வேண்டும்


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவ கல்வி இடங்களை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Jan 2022 9:08 PM GMT (Updated: 12 Jan 2022 9:08 PM GMT)

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் ஆகிய மருத்துவ கல்வி இடங்களை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் அவரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 பக்கங்களைக் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

12-ம் வகுப்பு மதிப்பெண்

தமிழகத்தில் மருத்துவ கல்வியில் நீட் தேர்வு இருக்கக் கூடாது என்று தொடர்ந்து தமிழக அரசு எதிர்த்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்காத சூழ்நிலையை கருதியே அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்குவதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்காக கவர்னரிடம் அனுப்பி வைத்துள்ளோம். இதன் மூலம் மருத்துவ கல்வி பெறுவதில் இருக்கும் சமூக இடைவெளி நீக்கப்பட்டு சமூகநீதி கிடைக்கும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் ஆகிய மருத்துவ கல்வி இடங்களை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசே நிரப்பிக்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

கோவையில் எய்ம்ஸ்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் 27.1.2019 அன்று நாட்டினார்.

எனவே அங்கு கட்டுமான பணியை நடத்துவதற்கு நிதி மற்றும் நிர்வாக அதிகாரத்தை அளித்து ஒரு குழுவை மத்திய அரசு உருவாக்க வேண்டும். கோவையில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கும்.

6 மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், பெரம்பலூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் இல்லை. எனவே மத்திய திட்டத்தின் கீழ் இந்த 6 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரியை அமைக்க வேண்டும்.

தரம் உயர்த்த நிதி

முழுவதும் அரசு நிதியில் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய கல்வி இடங்களை பெறும் முறையை நீக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்0தில் புதிய 19 மாவட்ட தலைமையக ஆஸ்பத்திரிகளை தொடங்க அரசு முன்வந்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள துணை மாவட்ட ஆஸ்பத்திரிகளை 500 படுக்கைகள் கொண்ட மாவட்ட தலைமையக ஆஸ்பத்திரிகளாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆஸ்பத்திரிகள் தொற்று பரவல், பேரிடர் காலங்களில் தயார் நிலையில் வைக்கப்படும். இவற்றை தரம் உயர்த்த தேவைப்படும் ரூ.950 கோடியை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story