தி.மு.க. ஆட்சியில்தான் புதிய மருத்துவ கல்லூரி திட்டம் கொண்டுவரப்பட்டது அமைச்சர் பேட்டி


தி.மு.க. ஆட்சியில்தான் புதிய மருத்துவ கல்லூரி திட்டம் கொண்டுவரப்பட்டது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2022 11:05 PM GMT (Updated: 12 Jan 2022 11:05 PM GMT)

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான திட்டம் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2011-ம் ஆண்டு அரசாணையாக வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை, சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட பதிவு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து ரூ.12 லட்சம் மதிப்பில் 8 பேருக்கு செயற்கை கால் வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியாக கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் உமா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் டாக்டர் மனிஷ், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் 21 ஆயிரம் பேர்

கடந்த ஆண்டுகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வருமான உச்சவரம்பாக ரூ.72 ஆயிரம் இருந்ததை கடந்த மாதம் ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் இருந்தால் ரூ.5 லட்சம் வரை பயன்பெறலாம் என்கிற அடிப்படையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரூ.382.5 கோடி கொரோனா நோயாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருந்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ‘பூஸ்டர் டோஸ்’ போட தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

73 சதவீதம்

தற்போது தமிழகத்தில் 4 லட்சம் பேரும் ‘பூஸ்டர் டோஸ்’ போடவேண்டும். ஆனால் இதுவரை 40 ஆயிரம் பேர் மட்டுமே போட்டுள்ளனர். எனவே ‘பூஸ்டர் டோஸ்’ போட தகுதியானவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 73 சதவீதம் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தியாவிலேயே 23 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு முதன்மை மாநிலம் என்கிற நிலையை எட்டியுள்ளது.

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரியிலேயே தி.மு.க ஆட்சியில் இருக்கும்போதே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அ.தி.மு.க.வினர் தாங்கள்தான் கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே அ.தி.மு.க.வால் தான் மருத்துவ கல்லூரிகள் வருவது தாமதமானது. அ.தி.மு.க.வால்தான் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது என்று மார்தட்டி கொள்வதில் நியாயம் இல்லை. தமிழகத்துக்கு இன்னும் 5 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் தேவை உள்ளது என மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story