நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்


நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
x

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் கலந்துகொள்ளும் முதல் அரசு விழா இது. எனவே அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றியையும் கூறுகிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கனவாகும். 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அதை அவர் குறிப்பிட்டு இருந்தார். அவரது கனவுதான் தற்போது நிறைவேறி இருக்கிறது.

நாட்டிற்கே முன்னுதாரணம்

இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவ கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ். இடங்களையும், மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு, மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கும் மனமார்ந்த நன்றி.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு மாநில அரசிற்கு தங்களது அரசு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டும். மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி, மக்களுக்கு பயன் தரும் வருமுன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட பல மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், தி.மு.க. அரசு நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

நீட் விலக்கு

புதுமையான திட்டங்களைத் தீட்டி, சிறப்பாக செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும். பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வரும் இச்சூழலில், தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும், அரசுத் துறையிலும் சிறப்பாக சேவை செய்வதற்கு தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படையாகும்.

எங்களது கொள்கை, இந்த வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதாகும். தமிழ்நாட்டின் மருத்துவத் துறையின் வெற்றியும் இந்த கொள்கையின் விளைவுதான்.

இந்த அடிப்படை கொள்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே மனிதவள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றித்தர வேண்டும். (இந்த கோரிக்கையை ஆங்கிலத்தில் முதல்-அமைச்சர் தெரிவித்தார்).

பொங்கல் வாழ்த்து

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கும்போது, கருணாநிதி இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். தமிழர்களின் நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை 2004-ம் ஆண்டு பெற்றுத்தந்தவர் அவர்தான். அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் இந்தச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

அந்த நிறுவனத்துக்கு 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைத்து தந்த மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின்போது தமிழுக்கு இத்தகைய சிறப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியானது. பிரதமருக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story