இன்று ஒரு நாள் மட்டுமே தரிசனம்: பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!


இன்று ஒரு நாள் மட்டுமே தரிசனம்: பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!
x
தினத்தந்தி 13 Jan 2022 6:05 AM GMT (Updated: 13 Jan 2022 6:05 AM GMT)

நாளை முதல் வருகிற 18-ந்தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்படும் என்பதால் பழனியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.

பழனி, 

பழனியில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்தின்போது பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி முருகனை தரிசிக்க நடந்து வருவது வழக்கம்.

இந்த ஆண்டு வருகிற 18 ஆம் தேதி தைப்பூசம் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் உள்ள காரைக்குடி, தேவகோட்டை, அறந்தாங்கி, மதுரை, தேனி, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், தாராபுரம், திண்டுக்கல் உள்படப் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்து விட்டு சென்ற வண்ணம் இருந்தனர்.

இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே வாரத்தின் கடைசி மூன்று நாட்கள் (வெள்ளி, சனி,ஞாயிறு) வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இருந்தும் தைப்பூசத்திற்காக முருக பக்தர்கள் பழனிக்கு சென்ற வண்ணம் இருந்தனர். 

இந்நிலையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதையொட்டி தமிழக அரசு 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி இல்லை என்று அறிவித்தது. மேலும் பழனியில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், தேரோட்டத்திலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதனால் அதற்கு முன்பாகவே முருகனை தரிசித்து விட்டு வந்து விடலாம் என்ற நோக்கத்தில் பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும் பக்தர்கள் தொடர்ந்து பழனி முருகனை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முருக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசித்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

இன்று 13ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே முருகனை தரிசிக்க முடியும் என்பதால் முருக பக்தர்கள் படிபாதை மற்றும் ரோப், விஞ்சுகளில் மலைக்கு சென்று பல மணிநேரம் காத்துக்கிடந்து முருகனை தரிசித்து விட்டு வருகிறார்கள். 

தைப்பூச திருவிழாவின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் முக்கிய சாலைகள் ஒருவழிப்பாதையாக அமல்படுத்தப்படும். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் தற்போது கடைபிடிக்கவில்லை. இதனால் அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டத்தை ஒழுங்குபடுத்த 600 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் நேற்று மாலையே பல கடைகளில் பஞ்சாமிர்தம் தீர்ந்து விட்டது. அவற்றை கொண்டு வருவதற்கு வாகனங்களும் வர முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

இதனால் பஞ்சாமிர்தம் வாங்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் சில கடைகளில் பஞ்சாமிர்தத்தை வாங்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் பழனி நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

Next Story