புதுச்சேரி தலைமை செயலாளருக்கு கொரோனா


புதுச்சேரி தலைமை செயலாளருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 6:36 PM GMT (Updated: 13 Jan 2022 6:36 PM GMT)

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ள நிலையில் தலைமை செயலாளர் மற்றும் 20 டாக்டர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ள நிலையில் தலைமை செயலாளர் மற்றும் 20 டாக்டர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1,107 பேர் பாதிப்பு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு புதுவையில் கொரோனா தொற்று பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நாள்தோறும் தொடர்ச்சியாக பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.
இந்தநிலையில் நேற்று கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. அதாவது நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 1,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 956 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். காரைக்காலில் 126 பேர், ஏனாமில் 7 பேர், மாகியில் 18 பேர் அடங்குவர். 
40 பேர் குணமடைந்தனர்
தற்போது ஆஸ்பத்திரிகளில் 167 பேர், வீடுகளில் 4 ஆயிரத்து 103 பேர் என 4 ஆயிரத்து 270 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 40 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 26.44 சதவீதமாகவும், குணமடைவது 95.40 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம முதல் தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 860 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,660 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியை 595 பேர் செலுத்தியுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 91 ஆயிரத்து 798 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செயலாளர்
இந்த தொற்று பாதிப்பானது முக்கிய பிரமுகர்களையும் விட்டுவைக்கவில்லை. தலைமை செயலாளர் அஸ்வனிகுமாருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து அவருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார். 
இதேபோல் அரசு செயலாளர் ரவிப்பிரகாஷ், சப்- கலெக்டர் தமிழ்ச்செல்வன், வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி உள்ளிட்டோரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் நேற்று முன்தினம் தேசிய இளைஞர் விழா தொடக்க நிகழ்ச்சியில் கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துகொண்டார். 
இந்தநிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 டாக்டர்களுக்கு பாதிப்பு
புதுச்சேரி குடும்ப நலத்துறை இணை இயக்குனர் ஆனந்தலட்சுமி உள்பட அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Next Story