‘‘கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்’’ மு.க.ஸ்டாலின் உறுதி


‘‘கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்’’ மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 13 Jan 2022 9:50 PM GMT (Updated: 13 Jan 2022 9:50 PM GMT)

‘‘நான் மக்களோடு மக்களாக இருக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்’’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னை,

8 மாத தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றம்

கடந்த மே 7-ம் நாள் உங்களது அன்பான உத்தரவுடன் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். ‘வாக்களித்தவருக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்ந்து நான் முதல்-அமைச்சராக இருப்பேன்' என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.பொறுப்பேற்றுக்கொண்ட உடனே 5 முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் கையெழுத்திட்டேன். கோடிக்கணக்கான மக்களின் தேவையை, லட்சக்கணக்கான மக்களின் எதிர்ப்பார்ப்பை, ஒற்றைக் கையெழுத்தில் நிறைவேற்றிக்காட்டிய அரசுதான் இந்த அரசு.

பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் இல்லை

தேர்தலுக்கு முன்னால், தமிழ்நாடு முழுவதும் சுற்றி நான் பெற்ற மனுக்களில் 2½ லட்சம் மனுக்களை 100 நாட்களில் நிறைவேற்றிக்கொடுத்துள்ளேன். கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் மற்றும் கொரோனா கால நிவாரணமாக 13 பொருட்களை 2.15 கோடி குடும்பங்கள் பெற்றுள்ளார்கள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசை 2.15 கோடி குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறோம். இவை அனைத்துக்கும் மேலாக கோடிக்கணக்கான மகளிர் நித்தமும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு பஸ்களில் கட்டணம் இல்லை என்ற மாபெரும் உரிமையை வழங்கி உள்ளோம்.

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்

மக்கள் கடலில் மாபெரும் மகிழ்ச்சி அலை எழும்புவதற்கு இதுதான் காரணம். ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் போய்ச்சேரும் வகையில் செயல்பட்டுள்ளோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் மட்டுமில்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றும்.

கவர்னர் உரையில் 66 அறிவிப்புகள வெளியிட்டு, 49 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 8 மாதத்தில் கவர்னர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, 110-வது விதி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 1,641 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளோம்.

75 சதவீதம் நிறைவேற்றம்

அதில், 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. அதாவது வெளியிட்ட அறிவிப்புகளில் 75 சதவீதத்தினை நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதி இருக்கிற அறிவிப்புகள், புதிய அறிவிப்புகள் நிறைவேற்றப்படுவது குறித்து என்னுடைய அடுத்த உரையில் தெரிவிப்பேன்.

ஒன்று மட்டும் நிச்சயம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் இந்த ஸ்டாலின் நிறைவேற்றுவேன். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். தேர்தல் அறிக்கையை புத்தகம் போட்டு நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகக் கொடுத்துள்ளோம். அதனால் அதைவைத்து யாரும் பார்த்துக்கொள்ளலாம்.

வெளிப்படையான நிர்வாகம்

இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு நான் சொல்லவேண்டிய முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை இந்த ஆட்சியில் செயல்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் நான் அறிவித்த பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு சார்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறோம். அதேபோல் சட்டமன்றத்தின் மானியக்கோரிக்கையின் போது அமைச்சர்கள் துறைவாரியாக அறிவித்த அறிவிப்புகளும் 500 பக்க புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, எங்கள் செயல்பாடுகளுக்கான ஆதாரம் பொது வெளியில் இருக்கிறது. அந்த அளவுக்கு வெளிப்படையான நிர்வாகம்தான் இந்த ஸ்டாலினின் விருப்பம். அதுதான் தலைவர் கருணாநிதி எங்களுக்கு சொல்லித்தந்தது.

முக்கிய அடையாளம்

எதையும் சும்மா வார்த்தைக்கு சொல்லி, மறந்துவிடுபவர்கள் அல்ல நாங்கள். அதை கல்வெட்டுப்போல மனதில் பதிய வைத்துக்கொண்டு செயல்படுத்துவோம். செயல்படுத்தியும் வருகிறோம். பதவியேற்றுக்கொண்ட மே மாதம் முதல் என்னிடம் வந்த 2 ஆயிரத்து 683 கோப்புகளில் 2 ஆயிரத்து 619 கோப்புகளை பார்வையிட்டு அனைத்திலும் முடிவுகள் எடுத்து கையெழுத்து போட்டுள்ளேன். கோப்புகள் துரிதமாக நகர்வது தான் நல்லாட்சியின் முக்கியமான அடையாளம். அந்த அடையாளத்தின் நல்லரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நான் மட்டுமல்ல, அமைச்சர்கள் அனைவரையும் அவர்களிடம் வரும் கோப்புகளை உடனுக்குடன் முடிவெடுத்து அறிவிப்புகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்பது மட்டுமல்ல, அதனை கண்காணித்தும் வருபவன்நான்.

மக்களோடு மக்களாக...

கோப்புகள் தேங்காத அரசாக இந்த அரசை நடத்திக்காட்டி வருகிறேன். கோட்டையில் உட்கார்ந்து உத்தரவு போடும் முதல்-அமைச்சர் அல்ல நான். மக்களோடு மக்களாக இருந்து அவர்கள் சிந்தனைகளை உணர்ந்து அறிந்து செயல்படுத்திக்காட்டும் முதல்-அமைச்சராகச் செயல்பட்டு வருகிறேன்.நாளைய கோரிக்கையை இன்று உணர்பவனாக இருக்கிறேன். ஏனென்றால் நான் மக்களோடு மக்களாக இருக்கிறேன். உங்களுக்காகவே உழைக்கிறேன். உழைத்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Next Story