அச்சமூட்டும் கொரோனா பரவல்: 1 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்


அச்சமூட்டும் கொரோனா பரவல்: 1 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்
x
தினத்தந்தி 13 Jan 2022 11:09 PM GMT (Updated: 13 Jan 2022 11:09 PM GMT)

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட 1 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 54 ஆயிரத்து 325 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12,350 ஆண்கள், 8,561 பெண்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 911 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 8,218 பேரும், செங்கல்பட்டில் 2,030 பேரும், கோவையில் 1,162 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 57 பேரும், அரியலூரில் 56 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 24 பேர் உள்பட 12 வயதுக்குட்பட்ட 565 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2,883 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு

அதிக ஆபத்தான மற்றும் அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு வந்த 29 ஆயிரத்து 941 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 367 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்தவகையில் தற்போது வரை 29 மாவட்டத்தில் 241 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 28 லட்சத்து 68 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 8 ஆயிரத்து 987 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 14 ஆயிரத்து 503 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

25 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 12 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 13 பேரும் என 25 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 8 பேரும், மதுரையில் 3 பேரும், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா இருவரும், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை, திருச்சி, வேலூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 13 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 930 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 235 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3,176 பேரும், செங்கல்பட்டில் 750 பேரும், திருவள்ளூரில் 383 பேரும் அடங்குவர். இதுவரையில் 27 லட்சத்து 27 ஆயிரத்து 960 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 610 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story