அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ; துண்டை சுழற்றிய பாட்டி ; 19 காளைகளை அடக்கிய முருகன்


அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ; துண்டை சுழற்றிய பாட்டி ; 19 காளைகளை அடக்கிய  முருகன்
x
தினத்தந்தி 14 Jan 2022 8:30 AM GMT (Updated: 14 Jan 2022 8:30 AM GMT)

அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5ம் சுற்ரு முடிவில் 19 காளைகளை அடக்கிய வளையாங்குளம் முருகன் முதல் இடம் பிடித்து உள்ளார்.

மதுரை

அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 5  சுற்றுகள் முடிவடைந்து 6 ஆம் சுற்று தொடங்கியது. 

இதுவரை 405 காளைகள் அவிழ்த்துவிடப்படுள்ளன.

6வது சுற்றுக்கு 5 வீரகள் தகுதி பெற்று உள்ளனர்.

5 சுற்று முடிவில்  19 காளைகளை அடக்கிய  வளையாங்குளம் முருகன் முதல் இடம் பிடித்து உள்ளார். 


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் பொங்கல் பண்டிகை அன்று தொடங்கி பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறும் இதில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று நடைபெறும் அதன்படி

அவனியாபுரத்தில் காலை 7 மணிக்கு ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது.

ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் , மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்கள் முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன.

மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் கட்டாயம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர்.

போட்டியில் கலந்து கொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிசீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

காளை வெளியேறகூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டு இருந்தன.

போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுகிறது.

அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு கேமிராக்கள் வழியே கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.

அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு,ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது.

போட்டியானது காலை தொடங்கி மாலை 3மணிவரை நடைபெறவுள்ளது.

சிறந்த காளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி சார்பில்  மோட்டார் சைக்கிளும் வழங்கப்படவுள்ளது.

தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராஜன் செல்லப்பா ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி ஆர் ராஜசேகரன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருந்தினர் கலந்துகொண்டனர் . ஜல்லிக்கட்டு போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்கள்   நடிகர் வடிவேல் பட காமெடி வசனங்களை அவ்வப்போது பேசி, ஜல்லிக்கட்டு விழாவை கலகலப்பாக்கி வருகின்றனர் ..

அவனியாபுரம் ஜல்லிகட்டில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மூதாட்டி ஒருவர், காளைகளை தழுவிய காளையர்களை, டான்ஸ் ஆடி  துண்டைசுழற்றி உற்சாகப்படுத்தினார். 

அவனியாபுரம் ஜல்லிகட்டில் அதிக காளைகளை தழுவி யார் முதல் பரிசை தட்டி செல்ல உள்ளனர் என கடும் போட்டி நிலவுகிறது. வலையங்குளம் வீரர் முருகன் 19  காளைகளை பிடித்து மதியம் 2 மணி நிலவரப்படி, முதல் இடத்தில் இருந்தார் . அவனியாபுரம் வீரர் கார்த்திக் 16 காளைகளை தழுவி 2 ம் இடத்தில் உள்ளார்.

இவர்களில் யார் அதிக காளைகளை தழுவி முதல் இடத்தை தட்டி செல்ல உள்ளனர் என கடும் போட்டி நிலவுகிறது.

Next Story