அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளை அடக்கி கார்த்தி முதல் பரிசு; முருகன் 2வது பரிசு


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளை அடக்கி கார்த்தி  முதல் பரிசு; முருகன் 2வது பரிசு
x
தினத்தந்தி 14 Jan 2022 11:52 AM GMT (Updated: 14 Jan 2022 12:14 PM GMT)

6 சுற்றுகள் நிறைவடைந்தது. மொத்தம் 523 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

சென்னை

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் பொங்கல் பண்டிகை அன்று தொடங்கி பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறும் இதில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று நடைபெறும் அதன்படி

அவனியாபுரத்தில் காலை 7 மணிக்கு ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது.

ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் , மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்கள் முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன.

மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் கட்டாயம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர்.

போட்டியில் கலந்து கொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிசீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

காளை வெளியேறகூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டு இருந்தன.

போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுகிறது.

அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு கேமிராக்கள் வழியே கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.

அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு,ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது.

சிறந்த காளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி சார்பில்  மோட்டார் சைக்கிளும் பரிசு வழங்கப்பட உள்ளது.

6 சுற்றுகள் நிறைவடைந்தது. மொத்தம் 523 காளைகள்  அவிழ்த்து விடப்பட்டுள்ளது. 7-ம் சுற்று தொடங்க உள்ள நிலையில் அதிக காளைகளை பிடித்தவர்களை வைத்து இறுதி சுற்று நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்தி 24 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். 

 வலையங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் 19 காளைகளை அடக்கி 2வது பரிசை பெற்றார்.

ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் இருக்கும் பகுதிக்குள் மாடுகள் சென்றுவிடாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 


இந்நிலையில், மாடு வெளியேறும் பகுதியில் நின்றுகொண்டு ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாலமுருகன் என்ற 19 வயது இளைஞரை, அந்த வழியாக வந்த ஒரு மாடு முட்டித்தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகனை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பிற்பகல் நிலவரப்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 25 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 8 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 15 பேர் என மொத்தம் 48 பேர் காயமடைந்துள்ளனர்.

Next Story