ஆரவாரத்துடன் நடைபெற்று வந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு நிறைவு


ஆரவாரத்துடன் நடைபெற்று வந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு நிறைவு
x
தினத்தந்தி 14 Jan 2022 12:11 PM GMT (Updated: 14 Jan 2022 12:11 PM GMT)

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளின் இறுதி சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

மதுரை, 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் பொங்கல் பண்டிகை அன்று தொடங்கி பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறும். இதில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று நடைபெறும். அதன்படி மதுரை அவனியாபுரத்தில் காலை 7 மணிக்கு ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது.

ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன. மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் கட்டாயம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டது. போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர்.

போட்டியில் கலந்து கொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிசீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. காளை வெளியேறகூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டு இருந்தன.

போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெற்றது. அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்காணிப்பு கேமிராக்கள் வழியே கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டனர். அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு,ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது. தொடர்ந்து போட்டியில் வென்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6 சுற்றுகள் முடிவடைந்து இறுதி சுற்று தொடங்கியது. 6வது சுற்று முடிவில் 528 காளைகள் அவிழ்க்கப்பட்டன.

பின்னர் பரபரப்பான இறுதி சுற்று போட்டிகள் தொடங்கியது. ஜல்லிகட்டில் 624 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. ஜல்லிக்கட்டில் வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. அதில் 24 காளைகளை பிடித்து கார்த்திக் முதலிடமும், 19 காளைகளை பிடித்து முருகன் 2-வது இடமும், 12 காளைகளை பிடித்து பரத் 3 -வது இடம் பிடித்தனர். 

சிறந்த மாடுபிடி வீரரான  24 காளைகளை பிடித்த கார்த்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை பிடித்த முருகனுக்கு இரண்டு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 12 காளைகளை பிடித்து பரத்துக்கு பசுங்கன்று பரிசாக வழங்கப்பட்டது.

முதல் இடம் பிடித்து சிறந்த காளைக்கான பரிசு தேவசகாயம் என்பவருக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. 2-ஆம் இடம் பிடித்து சிறந்த காளைக்காக பசுங்கன்று பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் வர்ணனையாளர்களுக்கு தங்கக்காசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Next Story