திருச்சி : சூரியூர் ஜல்லிக்கட்டில், காளை முட்டி உரிமையாளர் பலி


திருச்சி : சூரியூர் ஜல்லிக்கட்டில், காளை முட்டி உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 15 Jan 2022 5:33 AM GMT (Updated: 15 Jan 2022 7:53 AM GMT)

திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டில், காளை முட்டி உரிமையாளர் பலியாகியுள்ளார்.

திருச்சி,

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடப்பதை போல திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றது. 

பல ஆண்டுகளாக தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு இந்த கிராமத்தில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாட்டுப்பொங்கல் தினமான இன்று, திருச்சி மாவட்டத்தில் நடக்கும் முதலாவது போட்டியாக ஜல்லிக்கட்டானது பெரியசூரியூரில் நடத்தப்பட்டது. 

ஜல்லிக்கட்டை முன்னிட்டு வாடிவாசல், முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை, அதன் முன்புள்ள திடலில் இருபுறமும் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பார்வையாளர் மேடையும், ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசல் வழியாக அழைத்து வருவதற்கு இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காலை 8.30 மணிக்கு போட்டியை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.


காலை 10.30 மணிவரை நடந்த போட்டியில் 100 மாடுகள் வரை அவிழ்த்து விடப்பட்டன. 15 மாடுகள் மட்டுமே வீரர்களால் அடக்கப்பட்டன.இந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி, உரிமையாளரான ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (வயது 30) என்பவர் படுகாயம் அடைந்தார். 

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

Next Story