தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் மீண்டும் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்த அறிவிப்பு வரும் வரை 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை தவிர, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வு நடைபெற இருப்பதன் காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளையும் ஒத்திவைக்கப்படுவதாகவும், திருப்புதல் தேர்வுகள் குறித்த அறிவுப்புகள் பின்னர் வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story