16 நாட்களில் 191 பேர் உயிரிழப்பு: கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்க விரைவில் தடுப்பூசி போட வேண்டும்


16 நாட்களில் 191 பேர் உயிரிழப்பு: கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்க விரைவில் தடுப்பூசி போட வேண்டும்
x
தினத்தந்தி 16 Jan 2022 8:17 PM GMT (Updated: 16 Jan 2022 8:17 PM GMT)

16 நாட்களில் 191 பேர் உயிரிழப்பு: கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்க விரைவில் தடுப்பூசி போட வேண்டும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள்.

சென்னை,

பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 191 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் 163 பேர் (85.3 சதவீதம்) 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகும். இந்த 191 பேரில் 94.7 சதவீதம் பேர் அதாவது 181 பேருக்கு இணை நோய்கள் பாதிப்பு இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை உயிரிழந்த 191 பேரில் இணை நோய்களுடன் இருந்த 159 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் ஒரு தவணை தடுப்பூசி மட்டும் போட்டவர்கள் என 131 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அதில் அதிக இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.

தமிழகத்தை பொருத்தவரை இதுவரை 62 சதவீத முதியவர்கள் முதல் தவணையும், 48 சதவீதம் முதியவர்கள் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் கொரோனா தடுப்பூசி போடமல் இணை நோய் பாதிப்பு உள்ள முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே வீட்டில் உள்ள முதியவர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க விரைவாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story