11 மாவட்டங்களில் 22 பேர் உயிரிழப்பு; 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா


11 மாவட்டங்களில் 22 பேர் உயிரிழப்பு; 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Jan 2022 8:57 PM GMT (Updated: 16 Jan 2022 8:57 PM GMT)

தமிழகத்தில் நேற்று 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 39 ஆயிரத்து 559 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14,197 ஆண்கள், 9,778 பெண்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 975 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 8,987 பேரும், செங்கல்பட்டில் 2,701 பேரும், கோவையில் 1,866 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூரில் 73 பேரும், புதுக்கோட்டையில் 52 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று வெளிமாநிலங்களில் இருந்து வந்த 18 பேர் உள்பட 12 வயதுக்குட்பட்ட 705 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 3,825 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு

அதிக ஆபத்தான மற்றும் அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு வந்த 31 ஆயிரத்து 771 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 381 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது வரை 29 மாவட்டத்தில் 241 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் அனைவரும் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 29 லட்சத்து 39 ஆயிரத்து 923 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 11 ஆயிரத்து 82 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 25 ஆயிரத்து 119 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

22 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 11 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 11 பேரும் என 22 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 10 பேரும், திருவள்ளூரில் 3 பேரும், செங்கல்பட்டு, கோவை, காஞ்சீபுரம், கரூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூரில் தலா ஒருவரும் என 11 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 989 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 12 ஆயிரத்து 484 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,018 பேரும், செங்கல்பட்டில் 1,506 பேரும், திருவள்ளூரில் 685 பேரும் அடங்குவர். இதுவரையில் 27 லட்சத்து 60 ஆயிரத்து 458 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 476 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story