பட்டப்பகலில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை


பட்டப்பகலில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 17 Jan 2022 6:44 PM GMT (Updated: 17 Jan 2022 6:44 PM GMT)

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள், தடுக்க முயன்றவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

சென்னை,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சி பல்லவன் திருநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார். நேற்று அவரது மனைவி, மாமனார், மாமியார் மட்டும் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது மர்மநபர்கள் 2 பேர், பீரோவில் இருந்த பணத்தை திருடிக்கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டனர்.

தப்பி ஓட்டம்

கொள்ளையர்கள் அந்த பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதைகண்ட ராஜேஷின் மனைவி மற்றும் அவரது மாமனார், மாமியார் ஆகியோர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் கொள்ளையர்கள், 3 பேரையும் தாக்கிவிட்டு நகை, பணத்துடன் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story