தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 17 Jan 2022 9:59 PM GMT (Updated: 17 Jan 2022 9:59 PM GMT)

வடகிழக்குப் பருவமழை வெள்ள சேத சீரமைப்புப் பணிகளுக்காக தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனே நிதி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

2021-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

அதற்கான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற மத்திய அரசிடம் இருந்து ரூ.6,230.45 கோடி நிதி உதவி கோரி எனது அரசால் 3 முறை கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

கடும் தாக்கம்

கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை ஏற்கனவே பரவியுள்ள சூழலில், அதை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு முழுமையாக முடுக்கிவிட்டுள்ளது. இதற்கான பெரும் நிதித் தேவை, மாநில நிதிநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளையில், கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள், ஏற்கனவே சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருக்கின்றன.

உடனடியாக நிதி உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளச் சேதங்களுக்கான சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால் அது தமிழக மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். தமிழ்நாட்டிற்கு விரைந்து நிதியுதவி அளிப்பதற்குத் நீங்கள் உதவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேரில் அளித்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கடிதத்தை நேற்று டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து வழங்கினார்.

Next Story