‘திராவிட மாடல் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் தேவை’ மாநில திட்டக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


‘திராவிட மாடல் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் தேவை’ மாநில திட்டக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 18 Jan 2022 11:26 PM GMT (Updated: 18 Jan 2022 11:26 PM GMT)

‘திராவிட மாடல் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் தேவை’ என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மாநில திட்டக்குழு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் ஆய்வுக்கூட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், குழுவின் செயல்பாடுகள், புதிய கொள்கைகள், தமிழ்நாடு புத்தாக்கத் திட்டங்கள், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டங்கள், துறை வாரியான ஆய்வுகள், கள ஆய்வுகள் மற்றும் அரசு துறை செயலாக்க ஆலோசனைகள் குறித்து விளக்கி கூறினார்.

பின்னர், கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திட்ட அறிக்கை வழங்கலாம்

புதிய புதிய எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். அந்த எண்ணம் குறித்து அதுபற்றிய வல்லுனர் குழுவுடன் நீங்களே ஆலோசனை நடத்தலாம். குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு நீங்களே போய் பார்க்கலாம். அதன் நீள அகலங்கள் அனைத்தையும் நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

அதன்பிறகு அவற்றை மேம்படுத்த, அதனை அரசுக்கு உங்களது திட்ட அறிக்கையாக நீங்கள் வழங்கலாம். அதாவது ஒரு ஆலோசனையை நீங்கள் சொல்லும்போது, அதன் அனைத்தையும் நீங்களே அலசி ஆராய்ந்து எங்களுக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முன்னேறிய மாநிலம் தமிழகம்

தமிழகம் பல்வேறு வகைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. அது நமக்கு பெருமை தருவதாகும். வளர்ச்சி திட்டங்களையும், சமூக சீர்திருத்தத்தையும் இணைத்ததால் நம் மாநிலம் அடைந்த மாபெரும் பலன் அது.

அதே நேரத்தில், முழுமையாக முன்னேற்றம் அடைந்துவிட்டோமா என்றால் இல்லை. அத்தகைய முழுமையான முன்னேற்றத்தை அடையத் தேவையானவை குறித்து நீங்கள் சிந்திக்கவேண்டும். மனிதவள மேம்பாடு, வாழ்க்கை தரம், மனித வாழ்க்கையின் ஆயுள், கல்வி கற்றல், குழந்தைகள் வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, மக்கள் நலவாழ்வு, மனித உரிமைகள், சமூகநீதி, விளிம்பு நிலை மக்கள் என இப்படி அனைத்து தரப்புகளிலும் நாம் மேம்பட்டவர்களாக மாற வேண்டும்.

ஆக்கப்பூர்வ நடவடிக்கை

இத்தகைய குறியீடுகளை தமிழகத்தில் மேம்படுத்துவதற்கான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முனைப்போடு இருக்கிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீங்கள் அரசுக்கு வழங்க வேண்டும்.

சமச்சீரான வளர்ச்சியை, அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியை, நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அத்தகைய சமச்சீரான வளர்ச்சி நம்மிடம் இதுவரை இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் சமசீரான வளர்ச்சிக்கான பயணத்தை நாம் உடனடியாக தொடங்கியாக வேண்டும் என்ற இலட்சியவாதியாக நான் என்னை உருவாக்கிக்கொள்ள நினைக்கிறேன்.

நிதி நெருக்கடி

திட்டங்களை உருவாக்குவதற்கும் - அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியை குறைக்க வேண்டும். தமிழகத்தின் நிதி நெருக்கடியை நான் சொல்ல தேவையில்லை. அநாவசியச் செலவுகளை குறைப்பது குறித்த ஆலோசனைகள் தேவை.

நிதி திரட்டுதல் என்பது முக்கியமாக வரிவசூல் - பத்திரப்பதிவு - ஆயத்தீர்வை ஆகியவற்றின் மூலம் மட்டுமே வருகிறது. அதனைத்தாண்டி சுற்றுலா - சிறுகுறு தொழில்கள் - கைவினை பொருள்கள் - கைத்தறி போன்ற துறைகளின் மூலமாகவும் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். தொழில் உருவாக்கம் என்பது நிதி உருவாக்கமாகவும், வேலைவாய்ப்பு பெருக்கமாகவும் மாற வேண்டும்.

வழிகாட்ட வேண்டும்

கிராமப்புற மேம்பாடு குறித்து அக்கறையோடு நீங்கள் சிந்திக்க வேண்டும். இப்படி எத்தனையோ வகைகளை நீங்கள் சிந்தித்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முதல் கூட்டத்தில் நான் சொன்னது தான். சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் தி.மு.க. தமிழகத்தின் வளர்ச்சி என்பது - சமூகத்தின் வளர்ச்சியாக, வாழ்க்கை வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

திராவிட மாடல் வளர்ச்சி

அதுதான் உண்மையான வளர்ச்சி. அத்தகைய வளர்ச்சிக்கு பெயர் சூட்ட வேண்டுமானால் அதுதான் ‘திராவிட மாடல்'. பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. அதற்கு உங்களது வழிகாட்டுதல்கள் தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் விக்ரம் கபூர், முழுநேர உறுப்பினர் ராம.சீனுவாசன், உறுப்பினர் செயலர் த.சு.ராஜ்சேகர், மாநிலத்திட்ட குழு உறுப்பினர்களான மு.தீனபந்து, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் நர்த்தகி நடராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story