சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலினுக்கு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது


சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலினுக்கு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது
x
தினத்தந்தி 19 Jan 2022 9:54 PM GMT (Updated: 19 Jan 2022 9:54 PM GMT)

சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவில் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது.

சென்னை,

மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 11-வது பாராளுமன்ற உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.

இதில், ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021-ம் ஆண்டின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் டி.ஜே.ஞானவேல்ராஜா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினர் நேரடியாக வந்து விருதுகளை பெற்றுச்செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

இதேபோல, ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. உலகெங்கிலும் வளர்ந்து வரும் தலைவரால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19-ந் தேதியன்று இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது.

Next Story