பொங்கல் விடுமுறை எதிரொலி 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா


பொங்கல் விடுமுறை எதிரொலி 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Jan 2022 10:00 PM GMT (Updated: 19 Jan 2022 10:00 PM GMT)

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடைந்துள்ளதால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பலர் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) பொங்கல் விடுமுறைகள் முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. கடந்த இரு தினங்களாக குறைந்த தொற்று எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் எண்ணிக்கையை விட 3093 அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

26 ஆயிரத்து 981 பேர்

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 44 ஆயிரத்து 816 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15,477 ஆண்கள், 11,504 பெண்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 981 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 8,007 பேரும், கோவையில் 3,082 பேரும், செங்கல்பட்டில் 2,194 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 103 பேரும், அரியலூரில் 88 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 28 பேர் உள்பட 12 வயதுக்குட்பட்ட 898 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4,032 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆஸ்பத்திரி சிகிச்சையில்...

தமிழகத்தில் இதுவரை 30 லட்சத்து 14 ஆயிரத்து 235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரத்து 391 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 36 ஆயிரத்து 415 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 816 பேர் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 157 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், 953 தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

35 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 12 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 23 பேரும் என 35 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், காஞ்சீபுரத்தில் 3 பேரும், ஈரோடு, மதுரை, திருச்சியில் தலா இருவரும், கோவை, கடலூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூரில் தலா ஒருவரும் என 15 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 73 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 17 ஆயிரத்து 456 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 7,298 பேரும், செங்கல்பட்டில் 1,817 பேரும், திருவள்ளூரில் 956 பேரும் அடங்குவர்.

இதுவரையில் 28 லட்சத்து 6 ஆயிரத்து 501 பேர் குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 1 லட்சத்து 70 ஆயிரத்து 661 பேர் குணமடையாமல் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story